Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

ஆண்டுக்கணக்கில், "அரியர்ஸ்' வைத்துள்ள, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அடுத்த ஆண்டு செப்டம்பர் தேர்வு வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. இந்த கால கட்டத்திற்குள் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், புதிதாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படும்.பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளன. பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேரடியாக சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதுவர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி அமலானதன் காரணமாக, 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 75 ஆயிரம் முதல், 90 ஆயிரம் பேர் வரை எழுதுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஆண்டுக்கணக்கில், "அரியர்ஸ்' வைத்துள்ளனர். இதனால், தனித்தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த மாணவர்கள், 2012, செப்டம்பரில் நடைபெறும் தேர்வுக்குள், "அரியர்ஸ்' பேப்பரில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதாவது, தேர்வுத்துறை விதிமுறைப்படி, வரும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்வு மற்றும் அதன்பின் செப்டம்பரில் நடைபெறும் தனித்தேர்வு ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத முடியும்.
நாளை துவங்கும் தனித்தேர்வை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் எழுதலாம். அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், 2012 செப்டம்பருக்குள், தோல்வி அடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை எனில், 2013 மார்ச்சில் நடைபெறும் தேர்வை, புதிய பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டியிருக்கும்.

தேர்ச்சி அடைந்த பாடங்கள் உட்பட, ஐந்து பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வெழுத வேண்டும். பல ஆண்டுகளாக, பழைய பாடத்திட்டத்தில் படித்துவிட்டு, திடீரென புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதுவது, தனித்தேர்வு மாணவர்களுக்கு பெரிதும் சிரமமாக இருக்கும்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வுத்துறை விதிமுறைப்படி, 2012, செப்டம்பர் தேர்வு வரை, பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுதலாம். அதன்பிறகும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத வேண்டுமெனில், தமிழக அரசின் அனுமதி தேவை.அதிகமான மாணவர்கள், "அரியர்ஸ்' வைத்திருந்தால், அவர்களின் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கக்கோரி, அரசிடம் தேர்வுத்துறை அனுமதி கேட்கலாம். அரசு அனுமதித்தால், கூடுதலாக ஒரு பருவமோ அல்லது இரு பருவ தேர்வுகளுக்கோ மாணவர்கள் அனுமதிக்கப்படலாம். அரசு அனுமதி மறுத்தால், புதிய பாடத் திட்டத்தின் கீழ், அனைத்து தேர்வுகளையும் எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பில்77 ஆயிரம் பேர்:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுகள், நாளை துவங்குகின்றன. அக்டோபர் 1ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வை, 48 ஆயிரத்து, 696 மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, 76 ஆயிரத்து, 828 மாணவர்களும் எழுதுகின்றனர்.

please comment!!!
சென்னை :""இந்தியாவில் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புகையிலை பழக்கத்தினால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்'' என்று, தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌலீனா அர்னால்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு தன்னார்வ நல குழுமத்தின் சார்பில், பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.
இதில், இக்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சௌலீனா அர்னால்டு நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் உள்ள இளைஞர்களில், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புகையிலை பழக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். புகையிலை பொருட்களை நுகர்வதால், வாய்புற்று நோய் உள்ளிட்ட 30 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. புகையிலை தயாரிக்கும் நிறுவனங்களும், இளைஞர்களை குறிவைத்தே தங்களது பொருட்களை தயாரிக்கின்றன.புகையிலை பயன்பாட்டை தடுக்க, டிச., 7, 2010ல் பிளாஸ்டிக் பொட்டலமாக விற்கப்படும் புகையிலை பொருட்கள், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற பொருட்களை விற்க, மத்திய அரசு தடை விதித்தது. இச்சட்டம் மார்ச் 1, 2011 முதல் நடைமுறைக்கு வந்தது.ஆனால், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இது குறித்து 2010ல், தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், புகையிலை சட்டம் குறித்து கடைக்கார்களுக்கு தெரியவில்லை.அதனால், புகையிலை மற்றும் அதன் சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கடைக்காரர்களிடம் அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சௌலீனா அர்னால்டு தெரிவித்தார்.
please comment!!!
சென்னை:தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை (லேப்-டாப்) கிராமப்புற மாணவர்களும் தடையோ, தயக்கமோ இல்லாமல் பயன்படுத்தும் வகையில், அவற்றில் தமிழ் ஒருங்குறியும் (யுனிகோடு), இயங்குமுறையும் (ஆபரேட்டிங் சிஸ்டம்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், பொறியியல், பலதொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, இந்த நிதியாண்டில், 9.12 லட்சம் மடிக்கணினிகள் வாங்க, 912 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு, அதிகபட்ச பலன் கிடைப்பதற்காக, மடிக்கணினியில் ஏராளமான, அதிநவீன வசதிகள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தாலுகாக்களிலும், மூன்று ஆண்டுகளுக்கு இலவச சேவை அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்தின் கிளை இருக்க வேண்டும்.மடிக்கணினியில் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குமுறைகள் இருக்க வேண்டும். குறுந்தகடு பதிவி (டி.வி.டி., ரைட்டர்), நிழற்படக் கருவி (கேமரா), கம்பியில்லா (ஒயர்லஸ்) 2 ஜி ராம் மற்றும் 320 ஜிபி வன்தகடு (ஹார்டு டிஸ்க்) ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களால், இவற்றைச் சரியான முறையில் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள். இவர்களால், ஆங்கிலத்திலேயே இருக்கும் மடிக்கணினி இயங்குமுறைகளை, கையாள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மேலே கண்ட பல்வேறு வசதிகளோடு, தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில், தமிழ் ஒருங்குறியும், தமிழ் இயங்குமுறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விசைப்பலகையும் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கொண்டிருக்கும். தமிழ் எழுத்துக்கள், எழுத்துருக்கள் (பான்ட்), கணினிக்கு உத்தரவு கொடுக்கப் பயன்படும், "டூல்ஸ்', கருத்தரங்குகளில் பயன்படுத்தப்படும், "பவர் பாயின்ட்', கணக்கு வழக்குக்கு உதவும், "ஸ்பிரட் ஷீட்' உள்ளிட்டவையும் தமிழில் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள், தமிழ்நாடு, "வெர்ச்சுவல் அகடமி' வசம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் இதற்கான மென்பொருளை வடிவமைத்து, தயாரிப்பாளர்களிடம் தந்துவிட்டனர். அவர்கள், அதை மடிக்கணினியோடு இணைத்து வழங்கியுள்ளனர்.இதனால், கிராமப்புற மாணவர்களும், ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களும், தமிழிலேயே கணினியை கையாள விரும்புபவர்களும், எந்த விதமான தயக்கமும், தடையுமின்றி, இலவச மடிக்கணினியைக் கையாளலாம்.
please comment!!!
மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. பிறப்பிலிருந்து, இறப்புவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நினைவுத்திறன் என்பது ஜீவாதாரமான அம்சமாய் விளங்குகிறது. நினைவுத்திறன் பலவகைப்பட்டதாய் இருந்தாலும், மனிதவாழ்வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத்திறன்தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும், மாணவர் பருவத்தில், நினைவுத்திறன் அதீத முக்கியத்துவம் பெறுகிறது.
அதிக நினைவுத்திறன் உள்ள மாணவர், சாதனை மாணவராக ஆகிறார். எனவே, சிறந்த நினைவுத்திறன் என்பதை ஒரு பெரிய வரமாகவும், பொக்கிஷமாகவும் மாணவர் சமுதாயம் கருதுகிறது. இந்திய கல்வித்திட்டத்தில், ஒருவரின் படைப்புத்திறனை விட, அவர் புத்தகத்தில் படித்ததை எந்தளவிற்கு நினைவில் கொண்டுவந்து தேர்வில் எழுதுகிறார் என்பதில்தான், அந்த மாணவரின் திறமையும், அறிவும் நிர்ணயிக்கப்படுகிறது. அவரின் எதிர்காலம், அவர் 3 மணிநேரத்தில் எழுதும் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, இங்கு நினைவுத்திறன்தான் அனைத்தும்,
அந்த நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் முதற்கொண்டு, அனைத்து பருவத்தினருமே, பலவிதமான முயற்சிகளை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஏனெனில், அபார நினைவுத்திறன் என்பது ஒரு மந்திர சக்தியைப் போன்றது. அந்த மந்திர சக்திக்காக பலரும் கஷ்டப்பட நினைப்பது ஒன்றும் அதிசயம் அல்லவே. நினைவாற்றல் என்ற அந்த மந்திர சக்தியை எவ்வாறெல்லாம் மேம்படுத்திக் கொண்டு, சாதனையாளராகத் திகழலாம் என்பதற்கான, பலவித விரிவான ஆலோசனைகள் இங்கே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன.
முதல் நிலையில் பதிவுசெய்தல்
முதல் நிலையில் பதிவுசெய்யாத அல்லது சரியான வகையில் பதிவுசெய்யாத சில விஷயங்களை, நினைவுத்திறனில் கொண்டுவர முடியாது. ஏராளமான மறதிப் பிரச்சினைகள் இந்தவகையைச் சேர்ந்தவை. உங்களுக்கு, சில வரலாற்று நிகழ்வுகளின் ஆண்டுகளோ, சில வரலாற்றுப் பாத்திரங்களின் பெயர்களோ நினைவிற்கு வராமல் போகலாம். சில நண்பர்களின் முகங்களோ அல்லது அவர்களின் பெயர்களோ நினைவில் வராமல் போகலாம். சில படங்களின் பெயர்களோ, நடிகர்களோ நினைவிற்கு வராமல் போகலாம். இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், நீங்கள் அவற்றை உங்கள் நினைவுத்திறனின் முதல்நிலையில் பதிவுசெய்யாததுதான்.
எனவே தவறு நம் மீதுதான். ஒரு விஷயம் அந்தளவிற்கு முக்கியமற்றது என்று நாம் நினைப்பதால், அவற்றை நாம் முதல் நிலையில் பதிவு செய்வதில்லை. அப்படி பதிவுசெய்யதா விஷயங்களைத்தான் நம்மால் நினைவுற்கு கொண்டுவர முடிவதில்லை.
விஷயங்களைக் கோப்பாக்குதல்
ஒரு சிறந்த அலுவலக செயல்பாட்டிற்கு, கோப்பாக்குதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு விதமான கோப்பிற்கும் ஒரு தலைப்பு இருக்கும் மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தலைப்புகளைக் கொண்ட கோப்புகள், ஒரு பொதுப் பெயரில் வகைப்படுத்தப்பட்டிருக்கும். சிறந்த முறையில் கோப்பிடப்பட்டிருந்தால்தான், தேவைப்படும்போது, எளிதாக எடுக்க வசதியாக இருக்கும். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவை வகைப்படுத்தப்பட்டிருக்கும். பழைய கோப்புகள் பதிவு செய்யப்பட்டு தனியிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றும் முக்கிய பணியிடத்திலிருந்து சற்று தொலைவிலும் இருக்கும்.
கணினியில் கூட, விஷயங்கள் கோப்புகளில்தான் சேமிக்கப்பட்டுள்ளன. மனித மூளையானது, பலவிதங்களில் கணினியைப் போன்றே செயல்படுகிறது. எனவே, சில விஷயங்களை முறையாக குறித்துக்கொண்டு அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள நாம் மூளைக்கு உத்தரவிட்டப் பிறகு, அவற்றை முறையாக கோப்பிடுவதற்கு நாம் மூளைக்கு உதவுவதும் முக்கியம். நினைவாற்றல் என்பதில், விஷயங்களை உடனே நினைவிற்கு கொண்டு வருதல் மிகவும் முக்கியம்.
ஒரு நபரை சந்திக்கையில், அவரது பெயரைச் சொல்லி அழைப்பதற்கு, அந்தப் பெயர் உடனடியாக நமக்கு நினைவில் வர வேண்டும். மேலும், நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, பேச்சை நிறுத்தாமலேயே அடுத்தடுத்த விஷயங்களை நினைவில் கொண்டுவந்து, தொடர்ச்சியாகப் பேச வேண்டும். பேச வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்து நினைவுப்படுத்துகையில், நினைவுக்கோப்புகளை களைத்துவிடக்கூடாது. எனவே, உடனடி நினைவுப்படுத்தலுக்கு, முறையான கோப்பாக்குதல் அவசியம்.
முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்தல்
ஏதேனும் ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது விழாவிலோ நமக்கு சில நபர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர்கள் ஒரு சம்பிரதாயத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களை இனிமேல் தொடர்புகொள்ள மாட்டோம் என்ற நிலை இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் முகங்களை முக்கியத்துவம் கொடுத்து, தனிப்படுத்தி நம் மூளையில் பதிவுசெய்ய மாட்டோம். எனவே, அந்தப் பெயர்களும், முகங்களும் நமக்கு மறந்துவிடும் அல்லது நினைவிற்கு கொண்டுவர முடியாதளவிற்கு எங்கேயோ சிக்கலான இடத்தில் பதிவாகிவிடும். எனவே, அதுபோன்ற நபர்களை நாம் மீண்டும் நினைவிற்கு கொண்டுவர முயன்றாலும் கோப்புகள் கலைக்கப்பட்டு, குழப்பப்பட்டு நமது முயற்சியில் நாம் தோல்வியடைந்து விடுவோம்.
ஆழ்மனதின் செயல்பாடு
நமது ஆழ்ந்த பய உணர்வுகள், மனக் கவலைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவை உட்பொதிந்த நிலையில், நமது ஆழ்மனதில் இருக்கின்றன. இவை, முக்கியமான நேரங்களில் நமது வாழ்க்கையில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த உணர்வுகள், சாதாரண உணர் நிலையில் இருந்து, ஆழ் மனதிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆழ்மனதிற்குள் இருக்கும் விஷயங்கள், நமது அன்றாட வாழ்க்கை அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அந்தளவு தேவையில்லாத விஷயங்களை, உணர் நிலையானது, ஆழ்மனதிற்குள் மாற்றுகிறது. எனவே, மேலோட்டமான அறிவு நிலையானது, தேவையற்ற விஷயங்களால் நிரம்பிக் காணப்படுவதில்லை. அதேசமயம், தேவையான நேரத்தில் தகவலும் கிடைக்கிறது. இதன்மூலம், நமது மனம் எதையும் மறப்பதில்லை என்பது தெரிய வருகிறது. கணினி செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், நாம் ஒரு கோப்பை நீக்கினாலோ அல்லது அழித்தாலோ, அது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நீங்குகிறதேயொழிய, முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அது ஒரு தனியிடத்தில் வைக்கப்பட்டு, தேவையானபோது எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆழ்மனம் என்பது நமது நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. சாதாரண அறிவுநிலையைக் காட்டிலும், ஆழ்மனம் என்பது அதிகளவில் விஷயங்களை தன்னுள் வைத்துள்ளது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொண்டு வர இயலாதபோது, அவற்றை நினைவுப்படுத்த ஆழ்மனதின் உதவியை நாடுகிறோம். மேலும், நினைவுப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம், ஆழ்மனதில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, அது சாதாரண அறிவுநிலையிலும் இருக்கலாம். ஆழ்மனம் என்பது விஷயங்களை தேடுகிறது. பெரும்பாலும், நல்ல இரவு உறக்கத்திற்குப் பிறகு, நாம் தேடிய விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.
சூழலும், பின்னணியும் முக்கியம்
நாம் ஒரு விஷயத்தை எப்போதும் தனியாக பார்ப்பதில்லை. அதனுடைய பின்னணி மற்றும் சூழல் ஆகியவற்றுடன் இணைந்தேப் பார்க்கிறோம். உதாரணமாக ஒரு மரத்தை நாம் பார்க்கையில், அதனுடன் இணைந்த பிற அம்சங்களையும் இணைத்தேப் பார்க்கிறோம். நாம் ஒரு வார்த்தையை மட்டும் தனித்துப் படிப்பதில்லை. அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கக்கூடிய சூழல் மற்றும் பின்னணியையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள, தேவையான சூழலையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில், சூழலும், பின்னணியும்தான், நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றி பலவிதமான விஷயங்களை நினைவில் வைக்க உதவுகிறது. ஒரு கதையை நாம் நினைவில் நிறுத்துகிறோம் என்றால், தேவையான சூழல் மற்றும் பின்னணி அதில் இருக்கிறது. தனித்த ஒரு விஷயம் எப்போதுமே நினைவில் நிற்காது.
தொடர்புடையதாக மாற்றுங்கள்
மூளையானது, நாம் பார்க்கும் விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் அதை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பொருத்தமானதாக மாற்றுகிறது. நாம் ஒரு விஷயத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்க்கிறோம். ஆனால், அறிவு அதை முப்பரிமாணத்தில் பார்க்கிறது.
ஒரு கவிதையை நமது மொழியில் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள நம்மால் முடிகிறது. ஆனால் நாம் அறியாத மொழியில் ஒரு வரியைக்கூட நினைவில் நிறுத்த முடிவதில்லை. தனக்கு தெரிந்த மொழிக்கே மூளை முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, நாம் ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்துகையில், மூளை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதை மாற்ற வேண்டும். அந்த வகையில் சில பொருத்தமான முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, உருவமைப்பு, இணைப்பு, ஆர்வம், புலன்களால் அறியக்கூடிய அம்சம், உணர்வுப்பூர்வ நிலை மற்றும் காட்சிநிலை.
முழுமையான சேமிப்பு
ஒரு விஷயத்தை நமது மூளையானது, ஒரு தகவலை முழுமையாக சேமித்து வைத்துக்கொள்கிறது. எனவே ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதை எளிதாக நினைவுப்படுத்த முடியும் மற்றும் அவற்றை நமது மனக்கண்ணில் முழுமையாகப் பார்க்க முடியும்.
உதாரணமாக, ஒரு கதையை கேள்வி-பதில் பாணியில் படித்தால் அதைப் புரிந்துகொள்ள நமக்கு சிரமமாக இருக்கும். பதிலாக, முழு கதையை சாதாரண வடிவில் முழுமையாகப் படித்துவிட்டு, அந்த கேள்வி-பதில் பகுதியை பார்க்கையில் நமக்கு அனைத்தும் புரியும். எனவேதான், ஒரு விஷயத்தை பகுதி பகுதியாகப் பார்க்காமல், அவற்றை முழுமையான அம்சத்தில் பார்த்தால், அதன் எந்த அம்சத்தையும்நம்மால் எளிதில் நினைவில் கொண்டுவர முடியும்.
பாகங்களாகப் பிரித்து நினைவிலேற்றுதல்
ஒரு வாகனத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் பாகங்களைப் பற்றி பிரித்துப் படித்து ஒரு முழு புரிதலுக்கு வருகிறோம். ஒரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அதன் அரசியல் அமைப்பு, மொழி, கலாச்சாரம், புவியியல் உள்ளிட்ட பல அம்சங்களை ஒவ்வொன்றாக படித்து, முழு புரிதலுக்கு வருகிறோம். அதுபோலத்தான், ஒரு பெரிய பாடத்தை மனப்பாடம் செய்ய வேண்டுமெனில், அவற்றை பகுதி பகுதியாகப் பிரித்து படித்துப் புரிந்து மனனம் செய்தால் எளிதாக இருக்கும்.
விஷயங்களை முறைப்படுத்தல்
நாம் நினைவில் கொள்ள நினைக்கும் விஷயங்களை, அப்படியே கொசசொசவென்று மனதில் ஏற்றினால், நினைவில் நிற்பது கடினம். எனவே, அவைகளை, வகைக்கேற்ப ஒழுங்குமுறைகளில் வரிசைப்படுத்தினால், நினைவில் ஏற்றுவதற்கு வசதியாகவும், எளிதாகவும் இருக்கும். தேவைப்படுகையில் மீண்டும் நினைவில் கொண்டு வருவது சுலபம்.
please comment!!!